பரியங்க யோகத்தில் விந்து சயம் கூறிய இயைபானே, பின், ஐந்து திருமந்திரங்களால் அமுரி தாரணை கூறுகின்றார்.
``அமுரி`` என்பது சிறுநீரில் உள்ள ஒரு மருந்துப் பொருள். ``அமரி`` என்பது மருவி, ``அமுரி`` என வழங்கப்படுகின்றது. அமரி - மரித்தலை (இறத்தலை) நீக்குவது. எனவே, இதுவும் ``அமிர்தம்`` என்பதனோடு ஒருபொருட் சொல்லேயாம். எனினும், குறித்த பொருள் விளங்குதற் பொருட்டு இதனை வேறு குறியீட்டுச் சொல்லாக வைத்து வழங்குவர். ``அமுரி`` எனப்படுவது சிறுநீரே என்பாரும் உளர். அது பொருந்தாமை, இங்கு வரும் திருமந்திரங்களாலே அறியப்படும்.
மருத்துவ முறையிலும் சிறுநீரிலிருந்து அமுரி எடுக்கும் முறை உளது. அவ்வாறு செய்யமாட்டாதார், சிறு நீரையே அமுரியாகக் கொள்வர்.
வெளிப்போந்த சிறுநீரிலிந்து மருத்துவ முறையாற் பெறும் அமுரியை, அஃது உள்ளிருக்கும்பொழுதே யோக முறையால் நிறுத்தி உடலிற்குப் பயன்படச் செய்யும் முறையே இங்கு ``அமுரி தாரணை`` எனக் கூறப்படுகின்றது. ``தாரணை`` என்னும் பெயர்தானே இஃது யோக முறையாதலை இனிது விளக்கும். மருத்துவ முறையில் அமுரியைப் பெறுதலை இங்குக் கூறுதற்கு ஓர் இயைபின்மை அறிக. காய சித்தி முதலியனவும் இங்கு யோக முறையானே கூறப்பட்டமை ஓர்ந்துணரத் தக்கது.